Wednesday, January 23, 2013

மதுவும் மயக்கமும்

மதுவும் மயக்கமும்
**********************
சிலி நாட்டு கிராமப்புறங்கள் வழியாகப் பயணம் தொடர்ந்தது. ‘தரிசாகக் கிடந்த எங்கள் நாட்டின் தென்பகுதியைப் போலன்றி, நிலங்கள் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு துண்டு நிலத்திலும் விவசாயம் செய்யப்பட்டிருந்தது. நட்புணர்வு மிகுந்த சிலி மக்கள் நாங்கள் சென்ற இடங்களில் எல்லாம் எங்களை வரவேற்றார்கள்.’ சிலியின் விருந்தோம்பல் பண்பு எர்னஸ்டோவை வெகுவாகக் கவர்ந்தது.
கெண்டைக்கால் வரை நீளும் கால்சட்டை ஒன்றை ஒருவர் எர்னஸ்டோவுக்கு அளித்தார். இன்னொரு வீட்டில் நல்ல இருப்பிடம் கிடைத்தது. உறங்குவதற்கு நல்ல போர்வையும் உண்பதற்கு நல்ல உணவும் கிடைத்தது. எல்லாவற்றுக்கும் மேலாக அது பாப்லோ நெரூதாவின் நாடு. எல் ஆஸ்ட்ரால் என்னும் பத்திரிகைக்கு எர்னஸ்டோவும் ஆல்பர்ட்டோவும் பேட்டியளித்தனர். அர்ஜென்டினா செய்தித்தாள்கள் போலில்லாமல் சிலியின் தாள்கள் ஏராளமான பக்கங்களைக் கொண்டிருந்தன. இரண்டாவது பக்கத்தில் இப்படியொரு குறிப்பு இடம்பெற்றிருந்தது. ‘இரண்டு அர்ஜென்டைன தொழுநோய் மருத்துவ வல்லுநர்கள் மோட்டார் சைக்கிளில் தென் அமெரிக்கக் கண்டம் முழுவதும் பயணம். அவர்கள் இப்பொழுது டெமுகோவில் இருக்கிறார்கள். ராபா நூயிக்குப் போக விரும்புகிறார்கள்.’ எர்னஸ்டோ எந்த அளவுக்குத் தன்னைப் பற்றி சவடால் அடித்துக்கொண்டிருந்தால் இப்படியொரு செய்தியும் ‘வல்லுநர்’ என்னும் பட்டமும் கிடைத்திருக்கும் என்பதை எண்ணிப் பார்க்கலாம்!
அவர்களுடைய மோட்டார் சைக்கிளுக்கும்கூட சிலியில் நல்ல மரியாதை கிடைத்தது. வழக்கம் போல் டயர் பஞ்சர் ஆனபோது, அறிமுகமற்றவர்கள்கூட சிரித்த முகத்துடன் உதவிக்கு வந்தனர். எல்லாம் செய்தித்தாள் செய்த மாயம்! ஒரு மருத்துவ வல்லுநருக்கு உதவி செய்யும் பொன்னான வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்துவிடுமா என்ன? தயவு செய்து எங்கள் வீட்டுக்கு வாருங்கள் என்று வருந்தி அழைத்து இறைச்சியும் ஒயினும் அளித்து மகிழ்ந்தார்கள்.
இப்படித்தான் ஒருமுறை பிரச்னையாகிவிட்டது. மது அருந்துவதற்காகச் சில நண்பர்கள் எர்னஸ்டோவையும் ஆல்பர்ட்டோவையும் வரவேற்றபோது இருவரும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டனர். சிலி நாட்டு ஒயின் எர்னஸ்டோவை மிகவும் கவர்ந்திருந்தது. கணக்கு வழக்கில்லாமல் ஒட்டகம் போல் நிறைய புட்டிகளை அவர் காலி செய்தார். முடித்த கையோடு ஒரு கிராம நடன நிகழ்ச்சிக்குச் செல்லும் வாய்ப்பும் கிடைத்தது.
அதற்குப் பிறகு நடந்ததை எர்னஸ்டோவே பதிவு செய்கிறார். ‘அது ஒரு இனிமையான மாலைப்பொழுது. எங்கள் வயிற்றிலும் மனதிலும் ஒயினே நிறைந்திருந்தது. பணிமனையில் இருந்த, நன்றாகப் பழகிய மெக்கானிக் மிகுந்த குடிபோதையில் இருந்ததால் தன்னுடைய மனைவியுடன் நடனமாடும்படி என்னைக் கேட்டுக்கொண்டான். அவனுடைய மனைவி உற்சாகமான மனநிலையிலும் எதற்கும் தயாராகவும் இருந்தாள்.’
மது சாமானியர்களை மட்டுமல்ல வல்லுநர்களையும்கூட மாற்றிவிடுகிறது, தன்னிலை மறக்கச் செய்துவிடுகிறது. ‘மதுவை நிறைய குடித்திருந்த நான் அவள் கையைப் பற்றி வெளியே இழுத்துச் சென்றேன். எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் அவள் என் பின்னால் வந்தாள். ஆனால் தன் கணவன் தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதை உணர்ந்து தன் மனதை மாற்றிக்கொண்டாள்.’
எர்னஸ்டோவால் தன் நிலையை மாற்றிக்கொள்ளமுடியவில்லை. ‘எதையும் புரிந்துகொள்ளும் மனநிலையில் நான் இல்லை. நடன நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்த இடத்தில் சிறு சச்சரவு ஏற்பட்டது. எல்லாரும் பார்த்துக்கொண்டிருக்க, நான் அவளை ஒரு கதவை நோக்கி இழுத்தேன். அவள் என்னை உதைக்க முயன்றாள். நான் அவளை இழுக்கவே, அவள் நிலை குலைந்து கீழே விழுந்தாள்.’
அதற்குப் பிறகு நடன அரங்கில் இருந்தவர்கள் மருத்துவர்களைத் துரத்தத் தொடங்கினார்கள். தப்பினால் போதும் என்று எர்னஸ்டோவும் ஆல்பர்ட்டோவும் கிராமத்தை நோக்கி ஓடினார்கள். அதிகாலையில் நினைவு திரும்பியபோது எர்னஸ்டோ தனது முந்தைய இரவு சம்பவத்தைப் பற்றி என்ன நினைத்திருப்பார்?
ஆனால் அந்தப் பத்திரிகை செய்திக்கு இன்னமும் பலன் இருந்தது என்பதை எர்னஸ்டோ மறுநாள் தெரிந்துகொண்டார். ஒரு புதிய விபத்துக்குப் பிறகு (இந்த முறை ஒரு பசுமாட்டின் கால் மீது வண்டியை சறுக்கி விழுந்தது) சில ஜெர்மானியர்களின் வரவேற்பு அவர்களுக்குக் கிடைத்தது.
வண்டி இன்னமும் சரியாகவில்லை. மேட்டின்மீது ஏறும் ஒவ்வொரு முறையும் ஏதாவதொரு பாகம் விலகி விழுந்தது. அல்லது வெறுமனே மூச்சு வாங்கியபடி நின்றது. அல்லது உருண்டு விழுந்தது. அமெரிக்கக் கண்டங்களிலேயே உயரமானது என்று சிலியர்களால் அழைக்கப்படும் மாலேகோ என்னும் இடத்தை நோக்கி ஏறத் தொடங்கியபோது, வண்டி மீண்டும் செயலிழந்தது. ஏதாவதொரு வண்டியில் மோட்டார் சைக்கிளையும் ஏற்றிச் செல்லவேண்டும் என்பதால் ஒரு நாள் முழுவதும் சாலையிலேயே காத்துக்கிடந்தார்கள். பிறகே வண்டி கிடைத்தது.
குல்லிபுல்லி என்ற ஊரில் தங்கினார்கள். ‘அந்தச் சாலையில் பல செங்குத்தான மேடுகள் இருந்தன. முதலாவது மேட்டில் ஏறத்தொடங்கியதும், லா பாடெரோஸோ உயிரை விட்டுவிட்டது. ஒரு லாரியில் ஏறி லாஸ் ஏஞ்சலஸ் என்னும் நகரை அடைந்தோம். அங்கே மோட்டார் சைக்கிளை ஒரு தீயணைப்புப் படை நிலையத்தில் விட்டுவிட்டு, சிலி ராணுவ லெஃப்டினென்ட் ஒருவரின் வீட்டில் தங்கினோம்… மோட்டார் சைக்கிளில் நாங்கள் சவாரி செய்த கடைசி நாள் அதுதான். மோட்டார் சைக்கிள் இல்லாமல் பயணம் செய்யும் அடுத்த கட்டம் இதைவிடக் கடினமாக இருக்கும் என்று தோன்றியது.’
அந்த அதிகாரி ஒருமுறை அர்ஜென்டினா வந்திருந்தபோது, அவருக்கு அங்கு சிறப்பான வரவற்பு கிடைத்தால், தன்னை உபசரித்த நாட்டில் இருந்து வந்திருந்த இரு மருத்துவர்களைத் தக்கமுறையில் பதில் உபசாரம் செய்யவேண்டும் என்று விரும்பினார். எர்னஸ்டோ அவரிடம் விரிவாக உரையாடினார். தீயணைப்புத் தொழில் குறித்து சில அடிப்படைகளையும் தெரிந்துகொண்டார். தனது குறிப்பேட்டில் பதிவும் செய்துவைத்தார்.
‘எனக்குத் தெரிந்த வரையில், சிலியில் தீயணைப்புப் பணியை பொதுச் சேவையாகத்தான் செய்து வந்தார்கள். இது சிறந்த சேவையாகும். இப்படிப்பட்ட தீயணைப்புப் படைகள் செயல்படும் ஊர்களிலோ அல்லது வட்டாரங்களிலோ, மிகவும் திறமை வாய்ந்த மனிதர்களும்கூட அப்படைக்குத் தலைமை தாங்குவதைப் பெருமைக்குரிய விஷயமாகக் கருதுகிறார்கள். தீயணைப்புப் படைகளுக்கு வேலையே இருக்காது என்று நினைத்து விடாதீர்கள். தெற்கில் தீ விபத்துகள் ஏராளமாக ஏற்படுவதுண்டு. பெரும்பாலான கட்டடங்கள் மரத்தால் கட்டப்பட்டவை என்பதாலோ, மக்கள் மிகவும் ஏழைகளாகவும் சிறந்த கல்வியறிவைப் பெறாதவர்களாகவும் இருப்பதாலோ, வேறு காரணங்களாலோ, அல்லது இவை அனைத்தும் ஒன்று சேர்ந்ததாலோ, தீ விபத்துகள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணமாக இருந்தன. தீயணைப்புப் படை நிலையத்தில் நாங்கள் தங்கியிருந்த மூன்று நாட்களில் இரண்டு பெரிய தீவிபத்துகளும், ஒரு சிறிய விபத்தும் ஏற்பட்டன.’
அதிகாரியின் வீட்டில் இரவைக் கழித்துவிட்டு மறுநாள் தீயணைப்புப் படை நிலையத்துக்குச் சென்று பார்வையிடவேண்டும் என்று எர்னஸ்டோ விரும்பினார். எப்படி தீயணைப்பு வீரர்கள் செயல்படுகிறார்கள், தீயைக் கட்டுப்படுத்துகிறார்கள் என்பதை நேரில் காண அவர் விரும்பினார். ஆனால் வழக்கம் போல், பிணங்களைப் போல் அன்றிரவைத் தூங்கி கழித்ததால், அபாயச் சங்கு ஒலிப்பதை அவரால் கேட்கமுடியவில்லை. பணியில் இருந்த ஊழியர்களும் இவர்கள் உறங்குவதை மறந்துவிட்டு, வண்டியுடன் விரைந்துவிட்டனர்.
‘நாங்களோ காலையில் நீண்டநேரம் வரையில் தூங்கிக்கொண்டிருந்தோம். அதற்குப் பிறகுதான், நடந்தது என்னவென்றே எங்களுக்குத் தெரிந்தது. அடுத்த தீ விபத்தின்போது கண்டிப்பாக எங்களை அழைத்துச் செல்வதாகக் கூறினார்கள்.’

No comments:

Post a Comment