முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் சிறிலங்காவின் ஜனாதிபதி ஜெயவர்த்தனாவுக்கும் இடையில் 1987-இல் இடம்பெற்ற ஒப்பந்தத்தின் மூலமாக ஏற்பட்ட 13-ஆவது திருத்தச் சட்ட அமுலாக்கல் முழுமையாக தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை நிவர்த்தி செய்யவில்லை என்பது தமிழர் தரப்பினரின் ஆதங்கமாக இருந்தது.
தமிழர் தரப்பினரினால் ஏற்றுக்கொள்ள முடியாத அதிகாரங்களைக் கொண்ட இந்தச் சட்டத்தைச் சிங்கள அரசு கிடப்பில் போட்டது.
தற்போது இச் சட்டத்தை அமுலாக்க வேண்டுமென்கிற கருத்தை இந்திய அரசும், பல்வேறு உலக நாடுகளும் கூறிவருகின்றன.
இந்திய அரசினால் பரிந்துரைக்கப்பட்ட இச் சட்டத்தை அமுலாக்க சிங்களத் தரப்பினர் எதிர்ப்புக்களைத் தெரிவித்துவரும் இவ்வேளையிலாவது இந்தியா திருந்துமா என்கிற வினாவே எழுகிறது.
தற்போது சிறிலங்காவில் காணப்படுகின்ற அரசியல் சூழ்நிலைகள் சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவை நிரந்தரமாகப் பாதிக்கும் அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதாக சமீபத்தில் இந்தியாவின் முன்னணி ஆங்கில நாளேடான ‘த டைம்ஸ் ஒப் இந்தியா” தெரிவித்துள்ளது.
சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சகோதரரான கோத்தபாய ராஜபக்ச 13-ஆம் திருத்தச் சட்டம் தொடர்பில் வெளியிட்ட கருத்தினைத் தொடர்ந்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகக் குறித்த நாளேடு சுட்டிக் காட்டியுள்ளது.
இந்தியாவினால்சிறிலங்காவுக்கு வழங்கப்பட்ட தீர்வுத் திட்டமான 13-ஆம் அரசியல் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென்று கோத்தபாய வலியுறுத்தி வருகிறார்.
எனினும், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 13-ஆம் திருத்தச் சட்டத்துக்கு அப்பால் சென்று தீர்வினை வழங்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக மகிந்த த டைம்ஸ் ஒப் இந்தியாவுக்குத் தெரிவித்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் இரண்டு நாடுகளும் கூட்டறிக்கை ஒன்றையும் விடுத்திருந்தன. இந்த நிலையில் தற்போது இந்தச் சட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்பது, இந்திய அரசாங்கத்தை அதிர்ச்சியிலும், கோபத்திலும் ஆழ்த்தி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டின் போது சிறிலங்காவுக்கு எதிராக வாக்களித்தமை தொடர்பில் இந்தியாவுக்கும், சிறிலங்காவுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.
இதனை அண்மையில் மகிந்த இந்தியா சென்றிருந்த போது, பிரதமர் மன்மோகன் சிங் சீர் செய்ய முற்பட்ட போதும், அது சாத்தியமாகவில்லை என்று ‘த டைம்ஸ் ஒப் இந்தியா” சுட்டிக்காட்டியுள்ளது.
முரண்பாடான கருத்துக்கள்
சிறிலங்காவின் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும் சிரேஸ்ட அமைச்சர்களில் ஒருவருமான டியூ குணசேகர 13-ஆவது திருத்தத்தை ஆதரித்து கருத்து வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், “நான் எதிர்க்கட்சியில் இருந்தபோதும் 13-ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்ட போதும் அதனை ஆதரித்தேன்.
அந்த திருத்தத்தை நீக்கினால் ஆயுதப் போராட்டம் மீண்டும் வெடிக்கும்…13-ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்ட போது தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளவர்களில் அதை ஆதரித்த ஒரு சிலரில் நானும் ஒருவர். நான் அப்போது எதிர்க்கட்சியில் இருந்த போதும் அதை ஆதரித்தேன்.”
குணசேகர மேலும் கூறுகையில், “இந்தத் திருத்தத்தின் பின்னர் விடுதலைப்புலிகளைத் தவிர சகல தமிழ் தீவிர இயக்கங்களும் ஆயுதங்களைக் கைவிட்டன. அதை நாம் ரத்து செய்தால் அவர்கள் மீண்டும் ஆயுதப் போராட்டங்களைத் தொடங்கக்கூடும்.
அதனால் பயங்கரவாதம் மேலோங்கும். இவ்வாறான செயற்பாடுகளால் யுத்த வெற்றியாகக் கிடைத்த சமாதானத்தைப் பேண முடியாது. பிரச்சினைத் தீர்வுக்கான மாற்று ஏற்பாடின்றி 13-ஆவது திருத்தத்தை நீக்கிவிடுவது அபத்தமானது” என்றார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனவாதத்தைத் தூண்டும் வகையில் செயற்படுகின்றது என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “13-ஆவது திருத்தச் சட்டம் என்ற போர்வையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் நாட்டில் இனவாத முறுகல்களை உருவாக்க முயற்சிக்கின்றது. சிறிலங்காவின் இராணுவத்திற்கு உதவ வேண்டாம் என சீனாவிடம் கோரியுள்ளனர்.
இது தேவையற்ற கோரிக்கையாகும். அரசாங்கமொன்றின் கடமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்யக் கூடாது.”
மேலும் அவர் கூறுகையில், “13-ஆம் திருத்தச் சட்டம் தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மிகவும் தைரியமானதும், நேரடியானதுமான கருத்தை வெளியிட்டுள்ளார்.
மாகாணசபை முறைமையானது ஈழத்திற்கான வழியாகவே அமைந்துள்ளது. போரின் மூலம் வெற்றியீட்ட முடியாதவற்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்குலக நாடுகளுடன் இணைந்து மாகாணசபை ஊடாக வெற்றிபெற முயற்சிக்கிறது.
எனவே 13-ஆம் திருத்தச் சட்டம் முற்று முழுதாக ரத்து செய்யப்பட வேண்டும். பௌத்த மதத்திற்கு எதிரான சக்திகள் செயற்பட்டு வருகின்றன. நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதனை எதிர்க்கவில்லை” என எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
தேரரின் கருத்துக்களை மறுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிக்கை விட்டுள்ளது. அதில் இந்தியாவுக்கோ அல்லது சீனாவுக்கோ சிறிலங்காவின் இராணுவத்துக்கு உதவிகளைச் செய்ய வேண்டாம் என்று எதுவித கருத்தையும் கூறவில்லை என்றும், தமது பேச்சுக்களின் மூலப் பொருளே ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை நிவர்த்தி செய்யும் அரசியல் அதிகாரங்களை வழங்கும் முகமாக சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென்பதே என்றும் கூறியுள்ளனர்.
தமிழர்களுக்கு எதிரான விசமத்தனமான பிரச்சார வேலைகளை செய்வதை சிங்களத் தலைமைகள் நிறுத்த வேண்டுமென்பது தமிழர் தரப்பினரின் கருத்தாக உள்ளது.
இந்தியாவின் கருத்துத்தான் என்ன?
சிறிலங்காவில் 13-ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த எதிர்ப்புக்கள் கிளம்பியிருக்கும் இவ்வேளையில், இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங் தமிழகத்தின் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஒரு மடலை அனுப்பியுள்ளார்.
அதில் 13-ஆவது திருத்தச் சட்டம் குறித்த கருத்தை தமிழக அரசு தெரிவிக்க வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் நாடித் துடிப்பை அறியும் விதத்திலேயே இந்தியப் பிரதமரின் மடல் அமைந்துள்ளது. நியூடெல்லியிலும் சென்னையிலும் இது குறித்த பரவலானா கருத்துக்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.
குறிப்பாக குறித்த சட்டத்துக்கு ஆதரவாகப் பலர் கருத்துக்களை வெளியிட்டுள்ளன.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் ராமதாஸ் தெரிவிக்கையில், சிங்கள அரசு தமிழர்களை இரண்டாம் தரக் குடிமக்களாகவே கருதி இது நாள்வரை செயல்பட்டு வருகிறது. ஆனால், தற்போது வெளிப்படையாகவே தமிழர்களை மூன்றாம் தரக் குடிமக்களாக ஆக்கும் வேலைகளைச் செய்கிறது.
சிறிலங்காவில் ஒன்பது மாகாணங்கள் இருந்தன. பின்னர் ஏழு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டு கிழக்கில் தமிழர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. தற்போது ஐந்து மாகாணங்களாகப் பிரிக்கும் வேலைகளைச் சிங்கள அரசு செய்கிறது.
இதன் மூலமாக தமிழர்களின் இடங்கள் சிங்களவர்களின் இடங்களுடன் இணைக்கப்படுமாயின், தமிழர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு அவர்களின் பூர்வீகத் தாயகமான வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தமிழர்கள் சிறுபான்மையினராக ஆகும் நிலை உருவாகும்.

No comments:
Post a Comment