Thursday, December 13, 2012

வரலாறு படைத்த பிரபாகரன் *

வரலாறு படைத்த பிரபாகரன் *
******************************

மறப்பேனோவேலுப்பிள்ளை பிரபாகரன் தந்த பதிலை? 2002-ம் ஆண்டு நேர்காணலில் நான் கேட்ட 62-வது கேள்வி அது. ""உங்களுக்கு கடும் கோபம் வர வேண்டுமென்றால் நான் என்ன செய்ய வேண்டும்?'' அதற்கு அனிச்சை செயல் வேகத்தோடு அவரிடமிருந்து வந்த பதில்: ""என் தமிழ் இனத்தின் எதிரியாக இருந்து பாருங்கள். அப்ப தெரியும் என்ட கோபம்!''

வலியது வாழும். நியாயம், நீதி, உணர்வுகள், ஒழுக் கம், விழுமியங்கள் எவை பற்றியும் அதிகம் அலட்டிக் கொள்ளாத இயற்கையின் நியதி இது. ஆம், வலியது வாழும். போரின் கொடுமையோ அதனிலும் பெரிது. வெற்றி பெற்றவன் அனைத்தையும் எடுத்துக் கொள்வான், வரலாறு உட்பட. தோற்றுப் போனவன் தலைகுனிந்து குறுகி நிற்க வேண்டும். வேலுப்பிள்ளை பிரபாகரனும், தமிழீழ விடுதலைப்புலிகளும் விட்ட பிழைகளையும், செய்த தவறுகளையும்தான் இனி பலரும் அதிகமாகப் பேசப்புறப்படுவார்கள்.


தமிழீழ விடுதலைப் புலிகள் தவறிழைக்காத தேவ தூதர்கள் இல்லைதான். அவர்கள் செய்த குற்றங்களை, குற்றமென்று உரைக்கும் ஒழுக்க நிலை நமக்கு இருந்தால் மட்டுமே அவர்கள் முன்னெடுத்த விடுதலைப் போராட் டத்தை போற்றி, தொடர்ந்து அப்போராட்டத்தின் அரசியல் இலக்குகளை அம்மக்களுக்கு உறுதி செய்யும் செயற்பாடுகளை நாம் மேற்கொள்ள முடியும்.

மாற்றுக் கருத்துடைய பலரை அரசியல் களத்திலிருந்து அகற்றியது, உலக அளவிலான அரசியல் தலைமைத் துவங்களை உருவாக்காதது, "போர் வெற்றி' தொடர்பான மிகைப்படுத்தப்பட்ட நம்பிக்கைகளை மக்களிடையே உருவாக்கி தங்களை மக்களின் "பந்தயக் குதிரைகளாக' நிறுத்தி -மக்களை அரசியல்மயப்படுத்த தவறியது, ராஜீவ்காந்தி படுகொலையில் சம்பந்தப் பட்டது -அல்லது சம்பந்தப்படவில்லை யென்றால் அதனை சரிவர விளக்காதது... என தமிழீழ விடுதலைப்புலிகள் விட்ட பிழைகள் பல உண்டு.

எனினும் தமிழீழ விடுதலைப்புலிகள் இல்லாத தமிழ் வரலாறும், அவர்தம் வரலாற்றோடு தொடர்பற்ற தமிழர் எதிர்கால எழுச்சியும் இல்லை என்பதே நிதர்சனம். தமிழர் வரலாற்றின் அகற்றமுடியா ஆதர்ச மாகவும் வரலாற்றுப் பிரமாண்டமாகவும் வேலுப்பிள்ளை பிரபாகரன் நிலைபெற்று விட்டார் என்பதுதான் உண்மை. எனவேதான் அவரைப் பற்றின சரியான புரிதல் தமிழ் நாட்டுத் தமிழர்களாகிய நமக்கும் முக்கியமானதாகிறது. தமிழர்களாகிய நமது எதிர்கால எழுச்சிக்கும் அது முக்கியம்.

உலகின் ஒரு மூலையில் மிகச்சிறியதோர் தமிழ்க் கூட்டத்திலிருந்து முன்னுதாரணமான தோர் விடுதலைப் போராட்டத்தை கட்டி யெழுப்பியவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். அந்தப் போராட்டம் நமது இனத்தில் பிறந்த தென்பது, உணர்வுகளைத் தவிர வேறெதுவும் பெரிதாகப் பங்களிக்காத நமக்கும் பெருமையே.

நாற்புறமும் நீர்சூழ்ந்த சிறியதோர் நிலப்பரப்பில், இலங்கையோடு சுற்றியிருக்கும் பெரிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், சீனா நாடுகளினது நெருக்குவாரங்களுக்கு ஈடுகொடுத்து, மரபுவழித் தாக்குதல் படை யணிகள், சிறப்புப் படை பிரிவுகள், பீரங்கிப் பிரிவு, கடற்படை, உலக உளவு அமைப்புகள் மெச்சும் மிகத்திறன் கொண்ட புலனாய்வுத் துறை, 70-க்கும் மேலான கப்பல்களை கொண்ட அனைத்துலக ஆயுத கொள்வனவுப் பிரிவு, அரை உரிமை கொண்ட ஒரு செயற்கைக்கோள் -இவற்றிற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் 2002-முதல் ஓர் அரசுக்கு இருக்க வேண்டிய துறைசார் அலகுகளுடன் கூடியதோர் நடை முறை அரசை உருவாக்கி பல உலக நாடுகளை விடவும் நேர்த்தியான முறையில் அதனை நிர்வகிக்கும் திறனும், கண்ணியமும், ஒழுக்கமும் கொண்ட நிர்வாக ஏற்பாட்டையும் உருவாக்கி சாதனை செய்தவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். உலகெங்கும் யூதர்கள் இருந்தாலும் இஸ்ரேல் அவர்களது உரிமை பூமியாய் இருப்பதுபோல் உலகெங்குமுள்ள எட்டு கோடித் தமிழர்கள் தம் இனத்திற்கும் ஒரு நாடு இருக்கிறது என்று பெருமையுடன் பேசும் நிலைக்கு வெகு அருகில் தமிழினத்தை கொண்டு வந்தவர் அவர்.

No comments:

Post a Comment