Sunday, February 17, 2013

ஈழத்தமிழர்களின் பாதுகாப்புக்கு

ஈழத்தமிழர்களின் பாதுகாப்புக்கு அனைத்துலக பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினரான மாணிக்க வாசகர், உலக தமிழர் பாதுகாப்பு கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போது பின்வரும் மூன்று கோரிக்கைகள் தொடர்பில் அனைத்துலக சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். அவையாவன:

01. சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலைகள் போன்றன தொடர்பில் அனைத்துலக சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

02. சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு பொறுப்பளிக்கக் கூடிய அனைத்துலக பாதுகாப்பு பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.

03. தமிழ் மக்கள் தமது எதிர்காலம் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கான கருத்து வாக்கெடுப்பொன்று அனைத்துலக சமூகத்தின் கண்காணிப்புடன் சிறிலங்காவின் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் மற்றும் புலம் பெயர் தமிழ் சமூகம் மத்தியில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

தென்னிந்தியா, பர்மா, ஐரோப்பா, ஆபிரிக்கா, சிறிலங்கா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து இக்கருத்தரங்கில் கலந்து கொண்டிருந்த பிரதிநிதிகள் முன்னிலையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பாகவும், பிரித்தானியாவின் லண்டன் நகரில் இடம்பெற்ற இதன் நாடாளுமன்றின் நான்காவது அமர்வு தொடர்பாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்க வாசகர் எடுத்து விளக்கினார்.

தமிழர் பாதுகாப்பு கருத்தரங்கானது மலேசியாவின் கோலாலம்பூரில் இடம்பெற்றது. மலேசியாவின் எதிர்க்கட்சித் தலைவர் அனுவர் இப்ராகிம், பெனங் மாநிலத்தின் பிரதி முதலமைச்சர் பேராசிரியர் இராமசாமி, மலேசிய நாடாளுமன்றின் உறுப்பினரான பேராசிரியர் சரஸ்வதி, மற்றும் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்க வாசகரின் கருத்துக்கள் பின்வருமாறு:

“‘சிறிலங்காவின் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் கோட்பாடுகள், தாய்நிலம் மற்றும் சுயாட்சி போன்றவற்றின் அடிப்படையில் அவர்களுக்கான சுதந்திரத்தை பெற்றுக் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்ட அரசியற் கட்டமைப்பே நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஆகும். சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்கள் தற்போது தமக்கான அடிப்படை உரிமைகளைப் பெற்றுக் கொள்ளவோ அல்லது அவர்கள் தமது அரசியல் அவாக்களை அடைந்து கொள்வதற்கான வழிமுறைகளோ இல்லாது துன்புறுகின்றனர்.”

“உலகெங்கும் பரந்து வாழும் புலம் பெயர் தமிழ் சமூகத்தால், தமிழீழம் என்ற இலக்கை அமைதி முறையில் அரசியற் தீர்வின் ஊடாக அடைந்து கொள்வதற்காக தேர்தல் மூலம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தேர்வு செய்யப்பட்டது. இதன் மூலம் எமது மக்கள் அமைதியான, பாதுகாப்பான, கௌரவமான வாழ்வை வாழமுடியும். சிறிலங்காவில் வாழும் எமது மக்கள் மீது கடந்த 63 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் அடக்குமுறையின் விளைவாக 300,000 இற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் தமது உயிர்களை இழந்துள்ளனர். இந்நிலையில் கடந்த காலங்களில் தமிழ் மக்கள் சிறிலங்காவில் அமைதியுடன் வாழ்வதற்கான வழிவகைகள் பல்வேறு வடிவங்களில் தேடப்பட்ட போதிலும் அவை எதுவும் பலனளிக்கவில்லை. இந்நிலையில் தமிழீழம் என்கின்ற தனித் தேசமொன்றை அரசியற் தீர்வின் ஊடாக உருவாக்கிக் கொள்வதே இதற்கான நிரந்தரத் தீர்வாக அமையும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது”

“தமிழ் மக்களாகிய நாங்கள் ஏமாற்றப்பட்டோம், முட்டாளக்கப்பட்டோம், ஒரு தடவையல்ல இரு தடவையல்ல பல தடவைகள் அதாவது 63 ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் நாம் ஏமாற்றப்பட்டு, முட்டாளாக்கப்பட்டோம். சிறிலங்காவில் வாழும் எமது உறவுகள் மீது கொலைகளும், பாலியல் வன்புணர்வுகளும், படுகொலைகளும், அச்சுறுத்தல்களும் என பல்வேறு வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. சிறிலங்கா தொடர்பில் ஐ.நா வல்லுனர் குழுவால் தயாரிக்கப்பட்ட அறிக்கை, சனல் 04 தொலைக்காட்சி சேவையின் ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்’ என்ற காணொலி போன்றவற்றை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்த ஆவணங்களில் மனிதகுலத்திற்கு எதிராக சிறிலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட மீறல்கள், போர்க் குற்றங்கள் போன்றன சாட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக சிறிலங்காவில் இறுதிக் கட்ட யுத்தம் மேற்கொள்ளப்பட்ட மே 2009 காலப்பகுதியில் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட படுகொலைகள் மற்றும் வன்முறைகள் போன்றன உலகின் முன் சாட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இறுதி யுத்தத்தின் போது 40,000 வரையான மக்கள் கொல்லப்பட்டனர். கடல் நீரேரிப் பகுதி ஒன்றில் அகப்பட்டுத் தவித்த இந்த மக்கள் மீது குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. ஐ.நா நிறுவனங்கள், அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம், மனித உரிமை அமைப்புக்கள், அனைத்துலக ஊடகங்கள் என்பன இந்தப் போர் வலயத்திற்குள் செல்வதற்கான தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நேரத்தில் இங்கு உண்மையில் நடந்தவை உலகிற்கு இருட்டடிப்புச் செய்யப்பட்டன”

“பெண்கள், சிறார்கள், வயது முதிர்ந்தோர், மாற்று வலுவுடையோர் என எந்தவொரு வேறுபாடுமின்றி மக்கள் துன்பப்பட்டனர். பலர் தாகத்தால் இறந்தனர், பலர் இரத்தப் போக்கால் இறந்தனர், மருத்துவ வசதிகளோ உரிய மருந்தோ இல்லாது மக்கள் இறந்தனர். 146,000 இற்கும் மேற்பட்ட மக்கள் இறந்தார்களா அல்லது காணாமற் போனார்களா என்பது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த யுத்தத்தின் விளைவாக தற்போது 80,000 வரையான பெண்கள் தமது கணவன்மாரை இழந்து வாழ்கின்றனர். 60,000 வரையான சிறார்கள் தமது தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரையும் இழந்து தவிக்கின்றனர். யுத்தம் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் ஆகின்ற நிலையில், தற்போதும் சிறிலங்காவின் வடக்கு கிழக்கில் வாழும் மக்கள் மீது இனப்படுகொலைகளும் இனச்சுத்திகரிப்புக்களும் நடாத்தப்படுகின்றன. சிறிலங்கா இராணுவத்தின் செறிவான நடமாட்டம் காணப்படும் தமிழர் பகுதிகள் அச்சத்தில் உறைந்துள்ளன. இங்கு வாழும் மக்கள் மீது பாலியல் வன்புணர்வுகளும், கொலைகளும் துன்புறுத்தல்களும் தொடர்ந்தும் அரங்கேற்றப்படுகின்றன”

“ஐரோப்பா, அமெரிக்கா, கனடா, ஆசிய பசுபிக், ஆபிரிக்கா எனப் பல நாடுகளில் வாழும் புலம் பெயர் தமிழ் சமூகம் தமது வாக்குகளை வழங்கியதன் மூலம் 115 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். எமது அரசாங்கத்திற்கு யாப்பு உள்ளது. நாங்கள் எமது பிரதமராக மதிப்பிற்குரிய விஸ்வநாதன் உருத்திரகுமாரனை தெரிவு செய்துள்ளோம். இதுவரை எமது அரசாங்கம் நான்கு தடவைகள் கூடிப் பேச்சுக்களை நடாத்தியுள்ளது. எமது நாடாளுமன்றின் முதலாவது அமர்வானது பிலடெல்பியாவிலும், இரண்டாவது அமர்வு நியூயோர்க்கிலும், மூன்றாவது அமர்வு பவலோவிலும் நான்காவது அமர்வு கடந்த மாதம் லண்டனிலும் நடாத்தப்பட்டது. இதை விட நாங்கள் ஒவ்வொரு மாதமும் ஸ்கைப் மூலம் சந்தித்து கலந்துரையாடுவோம். நாங்கள் தமிழீழத்தைப் பெற்றுக் கொள்வதற்கான தீர்மானங்களை முன்வைத்துள்ளோம். இதனை நோக்கி நாம் செயற்படுகிறோம்.”

“‘நாடு கடந்த தமிழீழ அரசாங்கமானது தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக நட்பு நாடுகளின் அரசாங்கங்களிடமும், அனைத்துலக சமூகத்திடமும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற அமைப்புக்களிடமும் ஜெனீவாவில் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடமும், ஐ.நா மற்றும் அனைத்துலக ஊடகங்களிடமும் எடுத்துக் கூறிவருகிறோம். இவர்களிடம் யுத்தத்தின் போது உண்மையில் என்ன நடந்தது, அதற்கு முன்னரும் யுத்தத்தின் பின்னரும் தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் இழைக்கப்பட்ட கொடுமைகள் தொடர்பாகவும் எடுத்துக் கூறுகிறோம். நாங்கள் அனைத்துலக சமூகத்திடம் சிறிலங்காவில் தமிழ் மக்களின் இடங்களில் தொடரும் இராணுவ ஆக்கிரமிப்புக்கள், பாலியல் வன்புணர்வுகள், சித்திரவதைகள், சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் தமிழ் மக்கள் வாழிடங்களில் பௌத்த சிங்கள பேரினவாதிகளின் நடவடிக்கைகள் போன்றன தொடர்பாகவும் தமிழ் மக்களின் அரசியல் அவாக்கள் அவர்களின் அரசியல் உரிமைகள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவது தொடர்பாகவும் விளக்கமாக எடுத்துக் கூறுகிறோம்”

“அனைத்துலக சட்ட விதிமுறைகள், மனித உரிமைகள் மற்றும் ஐ.நா சாசனங்களின் அடிப்படையில் சிங்கள தேசத்திலிருந்து தமிழர் தேசத்தை பிரித்து தமிழீழம் என்கின்ற தனிநாட்டை உருவாக்குவதற்கான நகர்வுகளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கமானது புலம்பெயர் தமிழ் சமூகம் மற்றும் அனைத்துலக சமூகத்தை இணைத்து மேற்கொள்வதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது. சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்களுக்கு உண்மையில் என்ன நடக்கின்றது என்பதை ஊடகங்களும், இணையத்தளங்களும் மிகத் தெளிவாக வெளியிடுகின்றன. இவற்றை நீங்கள் வாசித்திருப்பீர்கள். இந்நிலையில், மனிதாபிமானத்திற்கான சேவை என்பது பல்வேறு வடிவங்களிலும், முறைகளிலும் மேற்கொள்ளப்படலாம். நீங்கள் அனைவரும் மனிதநேயம் மிக்கவர்கள். ஏனெனில் நீங்கள் எமது தமிழ் மக்கள் மற்றும் ஏனைய சிறுபான்மை சமூகங்களுக்காக குரல் கொடுத்து வருகிறீர்கள்.”

“தாம் யுத்தத்தை வென்றுவிட்டதாக சிறிலங்கா அரசாங்கம் நினைக்கிறது. ஆனால் மதிப்பிற்குரிய மகாத்மா காந்தி கூறியதுபோன்று, இராணுவப் போர் என்பதை விட பொருளாதார மற்றும் அரசியற் போர் என்பன மிகப் பிரதானமானவை என சிறிலங்கா அரசாங்கம் தற்போது உணர்ந்து கொண்டுள்ளது. தமிழ் மக்களுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுப்பதானது தற்போது அனைத்துலக நீதிமன்றின் கையிலேயே தங்கியுள்ளது. அதாவது அனைத்துலகிலும் உள்ள அரசாங்கங்கள், இராஜதந்திரிகள், அரசியல்வாதிகள், மனித உரிமை பாதுகாப்பாளர்கள் , சமாதானம் மற்றும் நீதியைப் பாதுகாப்போர் போன்றோர் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான அழுத்தத்தை வழங்க வேண்டும்”

“இறுதிப் போரில் 40,000 வரையான தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு நாம் அனைத்துலக நீதிமன்றிடம் கோரியிருந்தோம். அனைத்துலக நீதிமன்றானது தமிழ் மக்களின் பாதுகாப்பு மற்றும் அமைதி போன்றவற்றை உறுதிப்படுத்தும் வரை புலம்பெயர் தமிழர் சமூகம் தொடர்ந்தும் அமைதிவழியில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளும். நாங்கள் தமிழர்கள். நாங்கள் எமது அனைத்து வளங்களையும் ஒருங்கிணைத்து தமிழீழம் என்ற இலக்கை அடைந்து கொள்வதற்காக அமைதிவழியில் போராட வேண்டும். எங்களால் இதனைச் செய்ய முடியும். நாங்கள் இதனைச் செய்வோம். தமிழ் மக்களின் பிரச்சினைகள் தமிழர்கள் அனைவருக்கும் சொந்தமானவை.”

இவ்வாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினரான மாணிக்க வாசகர் மலேசியாவின் கோலாலம்பூரில் இடம்பெற்ற உலகத் தமிழர் பாதுகாப்பு கருத்தரங்கில் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment